தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: நாமக்கல் கடைவீதியில் அலை மோதிய மக்கள் கூட்டம்


தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: நாமக்கல் கடைவீதியில் அலை மோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2019 10:30 PM GMT (Updated: 26 Oct 2019 9:22 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நாமக்கல் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

நாமக்கல்,

தீபாவளி பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று ஜவுளி, பட்டாசு போன்ற பொருட்களின் இறுதிகட்ட வியாபாரம் அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நகைகள், ஜவுளி மற்றும் பட்டாசு வாங்க நாமக்கல்லுக்கு திரண்டு வந்ததால் கடைவீதி, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் திருடர்கள் நடமாட்டம் உள்ளதா? எனவும் போலீசார் கண்காணிப்பு கேமரா மற்றும் தற்காலிக கோபுரம் அமைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பஸ்சுக்காக காத்திருப்பு

இதுதவிர வெளியிடங்களில் இருந்து நாமக்கல்லில் தங்கி பணியாற்றி வந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பஸ்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாமக்கல் பஸ்நிலையத்தில் வழக்கத்தை விட அதிகமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பதை காண முடிந்தது.


Next Story