ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்பதில் கடும் சவால் இரவு - பகலாக போராடுகிறார்கள்


ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்பதில் கடும் சவால் இரவு - பகலாக போராடுகிறார்கள்
x
தினத்தந்தி 28 Oct 2019 11:30 PM GMT (Updated: 28 Oct 2019 6:49 PM GMT)

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற மீட்புக்குழுவினர் இரவு-பகலாக போராடுகிறார்கள். கடின பாறைகளை உடைக்க எந்திரங்கள் திணறுவதால், குழந்தையை மீட்பதில் கடும் சவால் ஏற்பட்டு உள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப் பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி யான பிரிட்டோ ஆரோக்கியராஜ் தனது வீட்டின் அருகே விவசாயமும் செய்து வருகிறார்.

அந்த நிலத்தில் சாகுபடி செய்வதற்காக 7 ஆண்டுகளுக்கு முன்பு 600 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் அதன் மேல் பகுதியில் கற்கள் மற்றும் மண்ணை கொட்டி மூடிவிட்டனர். பின்னர் அந்த இடத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு வந்தனர்.

சமீபத்தில் பெய்த கனமழையால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கியதால் கிணறை மூடியிருந்த மண் 30 அடி ஆழம் வரை உள்ளுக்குள் கீழே இறங்கியது.

கடந்த 25-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் அந்த இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த பிரிட்டோ ஆரோக்கியராஜின் 2 வயது மகன் சுஜித் வில்சன் எதிர்பாராத விதமாக அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டான்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து வந்து குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து, ஆழ்துளை கிணறு அமைந்த இடத்தில் இருந்து பக்கவாட்டில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சித்தனர். பாறை குறுக்கிட்டதால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே குழந்தைக்கு குழாய் மூலம் தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. மீட்புப்பணிக்கு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஆழ்துளை கிணற்றில் 28 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தை சுஜித் அன்று அதிகாலை 3.30 மணி அளவில் 88 அடி ஆழத்துக்கு சென்று விட்டான். இதனை தொடர்ந்து நவீன கருவி மூலம் குழந்தையை மீட்க முயற்சிக்கப்பட்டது. அப்போது மண் சரிந்து குழந்தையின் தலையில் ஒரு அங்குல உயரத்துக்கு விழுந்ததால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டது.

26-ந் தேதி சென்னையில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படையினரும், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு வந்து நவீன கருவிகள் மூலம் குழந்தையை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களுடைய முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே 98 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, அதன் வழியாக உள்ளே இறங்கி குழந்தை இருக்கும் இடத்தை நோக்கி பக்கவாட்டில் ஒரு சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக காரைக்காலில் இருந்து ராட்சத ‘ரிக்’ எந்திரம் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த எந்திரத்தின் மூலம் 14 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், கடின பாறைகள் இருந்ததால் எந்திரத்தின் பற்சக்கரங்கள் உடைந்தன. இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ராமநாதபுரத்தில் இருந்து அதிக திறன் கொண்ட மற்றொரு ‘ரிக்’ எந்திரம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரத்தின் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது.

ஆனாலும் கடின பாறைகளை உடைக்க முடியாமல் ராட்சத ‘ரிக்’ எந்திரம் திணறியது. நேற்று பகல் 12 மணி அளவில் 46 அடி ஆழம் வரை மட்டுமே குழி தோண்டப்பட்டது. அதிக திறன் கொண்ட அந்த ‘ரிக்’ எந்திரத்திலும் பற்சக்கரங்களில் பழுது ஏற்பட்டதால், மீண்டும் போர்வெல் எந்திரம் மூலம் பள்ளம் தோண்ட முடிவு செய்யப்பட்டது.

குழந்தையை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்கும்போது மண் சரியாமல் இருப்பதற்காக குழிக்குள் ராட்சத இரும்பு குழாய்களை இறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக லாரிகளில் ராட்சத குழாய்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இதற்கிடையே 46 அடி தோண்டப்பட்ட குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவரை இறக்கி குழந்தை சிக்கி கொண்டுள்ள இடத்துக்கு பக்கவாட்டில் துளை போடுவதற்காக ஆய்வு செய்யும் பணியை தொடங்கினர். இதற்காக பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர் ஒருவர் கவச உடை மற்றும் செயற்கை சுவாச கருவிகளுடன் நேற்று பகல் 12.30 மணி அளவில் பள்ளத்தில் இறங்கினார்.

இவருடன் மொத்தம் 6 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பள்ளம் தோண்டும் பணி முடிவடைந்தவுடன், தீயணைப்பு வீரர்கள் பள்ளத்தில் இறங்கி பக்கவாட்டில் சுரங்கம் போன்ற குகை அமைப்பார்கள்.

சுரங்கம் அமைக்கும் போது 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை மேலும் கீழே சென்றுவிடாமல் இருக்க, கேமரா மூலம் கண்காணித்து குழந்தையின் கைகள் ‘ஏர் லாக்’ மூலம் இறுக்கமாக பிடிக்கப்பட்டு உள்ளது.

என்.எல்.சி. மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆலோசனையின்படி மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மீட்புப்பணியை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

குழந்தையை மீட்க மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களாக இரவு-பகலாக போராடுகிறார்கள். பூமிக்கு அடியில் கடினமான பாறைகள் இருப்பதால் மீட்புப்பணி கடும் சவாலாக உள்ளது.

இதுபற்றி அங்கு முகாமிட்டு இருக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் தற்போது 88 அடி ஆழத்தில் இருக்கிறான். தொடர்ந்து நிலவும் சூழ்நிலைகள் குறித்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேசி வருகிறோம். குழந்தையை மீட்க பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அது குறித்தும் தொழில்நுட்ப குழுவினருடன் பேசி வருகிறோம். குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீட்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.

குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு உள்ள இடம் கடினமான பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது.

யாரிடமாவது குழந்தையை மீட்பதற்கான தொழில்நுட்பம் இருந்தால் அதனை தாராளமாக தெரிவிக்கலாம். பரிசீலித்து அதனை பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கான செலவுகளை பற்றி கவலையில்லை. அந்த செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஒரு சிலர் பலூன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமே என்று கூறுகிறார்கள். ஆனால் இங்கு அதை பயன்படுத்த முடியாது. வெளிமாநிலங்களில் இருந்தும் பொறியியல் வல்லுநர்கள் வந்து உள்ளனர். கண்டிப்பாக குழந்தையை மீட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

பாறைகளை குடைந்து துளைபோடுவது கடும் சவால் நிறைந்த பணியாக இருக்கிறது. தற்போது இங்கு கொண்டு வரப்பட்டுள்ள ‘ரிக்’ எந்திரம் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. சில மணி நேரத்தில் பள்ளத்தை தோண்டிவிடக்கூடிய திறன் கொண்டது.

ஆனால் கடின பாறைகள் இருப்பதால் அதனை குடைந்து பள்ளம் தோண்ட முடியாமல் ‘ரிக்’ எந்திரமே திணறி வருகிறது. 10 மணி நேரமாக துளைபோட்டும் 45 அடி வரை மட்டுமே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதுபோன்ற கடினமான பாறைகளை இதுவரை பார்த்தது இல்லை. திட்டமிட்டபடி பாறைகளை உடைத்து பள்ளம் தோண்ட முடியுமா? என கேள்வி எழுந்து உள்ளது.

குழந்தை விழுந்து 4 நாட்கள் ஆகிவிட்டதால் குழந்தையின் உடல்நிலையையும் துல்லியமாக அறிய முடியவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு வருகிறோம். தொடர்ந்து நம்பிக்கையின் அடிப்படையில் ஆக்சிஜனை செலுத்தி வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பேசி வருகிறோம். கூகுள் வரைபடம் மூலம் பார்க்கும்போது, நடுக்காட்டுப்பட்டியில் உள்ள இந்த குறிப்பிட்ட இடம் முழுவதுமே பாறைகளாக இருக்கிறது. எனவே அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். இதற்கு ஏதேனும் மாற்று வழி இருக்கிறதா? எனவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மீண்டு வர வேண்டும் என பல்வேறு இடங்களில் கோவில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் வழிபாடு நடத்தி வருகிறார்கள். நடுக்காட்டுப்பட்டிக்கு வந்த திரைப்பட நடிகர் தாமு, சுஜித் நலமுடன் மீண்டு வர வேண்டும் என வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதேபோல் திருநங்கைகள் மற்றும் பாதிரியார்களும் பிரார்த்தனை செய்தனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் குழந்தை சுஜித்திற்காக ஆங்காங்கே பொதுமக்கள் கடவுளிடம் மனமுருகி வேண்டுதல் நடத்தி, அது குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

இதற்கிடையே நடுக்காட்டுப்பட்டியில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து வந்தபோதிலும், அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் கொட்டும் மழையில் நின்றபடி ‘எழுந்து வா சுஜித்’ என்று உரக்க கோஷமிட்டனர்.

மணப்பாறை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரை, சாரையாக அங்கு திரண்டு வருகிறார்கள். இதனால் மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால், போலீசார் அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம், கலைந்து செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் இரும்பு தடுப்புகளை வைத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு, டீ, காபி போன்றவை வழங்கப்படுகின்றன. 

Next Story