திருக்கடையூர் அருகே மழை: தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது


திருக்கடையூர் அருகே மழை: தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 28 Oct 2019 11:00 PM GMT (Updated: 28 Oct 2019 8:17 PM GMT)

திருக்கடையூர் அருகே மழை காரணமாக தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது.

திருக்கடையூர்,

திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவர், தனது குடும்பத்தினருடன் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். இந்த தொகுப்பு வீடு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த நிலையில் மழையால் நேற்று முன்தினம் ராமுவின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக ராமு மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர். ஆனால், வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள், கியாஸ் சிலிண்டர், வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.

திருக்கடையூர் அருகே காடுவெட்டி, ரவணையன் கோட்டகம் ஆகிய ஊர்களில் 20-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து, அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே, சேதமடைந்த தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன்பு, அதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story