சுஜித்துக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


சுஜித்துக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 29 Oct 2019 11:00 PM GMT (Updated: 29 Oct 2019 8:28 PM GMT)

சுஜித்துக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

புதுக்கோட்டை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் வில்சன் கடந்த 25-ந் தேதி தவறி விழுந்தான். அந்த குழந்தையை மீட்கும் பணியில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட்டது. குழந்தையை மீட்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் இருந்து உயிருடன் மீண்டுவர வேண்டும் என தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டான். இதைத்தொடர்ந்து அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தை சுஜித் வில்சனுக்கு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் உள்ள சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தை சுஜித் வில்சனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மோகன்ராஜ், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சுப்பையா, ஆரோக்கியசாமி, வீரமுத்து மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு குழந்தை சுஜித் வில்சன் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

அன்னவாசல்

இதேபோல் அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித்திற்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story