மாவட்டம் முழுவதும் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் - கலெக்டர் ராமன் உத்தரவு


மாவட்டம் முழுவதும் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் - கலெக்டர் ராமன் உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 9:05 PM GMT)

சேலம் மாவட்டத்தில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் போர்வெல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பயன்பாடு இல்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பான முறையில் மூடுவது குறித்தும், தூர்ந்துபோன, கைவிடப்பட்ட மற்றும் தற்காலிகமாக பழுதடைந்துள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பான முறையில் உடனடியாக மூடுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் தனியார் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பயன்பாடற்ற, தூர்ந்துபோன, கைவிடப்பட்ட மற்றும் தற்காலிகமாக பழுதடைந்துள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் உடனடியாக பாதுகாப்பான முறையில் மூடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து மாநகர, நகர, பேரூராட்சி, ஊரக, உள்ளாட்சி பகுதிகளில் இதுபோன்ற ஆழ்துளை கிணறுகள் குறித்து கண்டறிந்து அவற்றை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

போர்வெல் உரிமையாளர்கள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி அரசின் உரிய அனுமதி பெற்ற பிறகு மட்டுமே ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் நிலங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் இருப்பின் பொதுமக்கள் அதனை உடனே சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தனியார் நிலங்களில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளியிலுள்ள தூர்ந்துபோன கிணறுகளை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து மூடிட வேண்டும். தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் விதித்து காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் பாதுகாப்பான முறையில் மூடப்படாமல் இருப்பது தெரியவந்தால் அதற்கு பொறுப்பான அனைத்து அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 5,563 பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டுள்ளன. மேலும், அந்தந்த துறை அலுவலர்கள் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளியில் தூர்ந்துபோன கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் அவ்வாறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். போர்வெல் உரிமையாளர்கள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி அரசின் உரிய அனுமதி பெற்ற பிறகு மட்டுமே ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story