நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: தர்மபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: தர்மபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 Oct 2019 10:00 PM GMT (Updated: 31 Oct 2019 10:51 PM GMT)

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தர்மபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை, 

இந்த ஆண்டு நடந்த மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 397 மதிப்பெண் பெற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக பதிவான வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த 12-ந்தேதி கைதானேன். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எனக்கும், என் தாயாருக்கும் ஜாமீன் கேட்டு தேனி கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு எங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், மாணவியின் சகோதரி மாற்றுத்திறனாளி என்பதாலும், அவருடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், மனுதாரருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்குவதாகவும், அதே நேரத்தில் அவருடைய தாயார் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story