டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க அனைத்து ஊராட்சிக்கும் புகை அடிக்கும் எந்திரம் கலெக்டர் தகவல்


டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க அனைத்து ஊராட்சிக்கும் புகை அடிக்கும் எந்திரம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 7:30 PM GMT)

டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க அனைத்து ஊராட்சிக்கும் புகை அடிக்கும் எந்திரம் வழங்கப் படும் என்று கலெக்டர் எஸ்.சிவராசு கூறினார்.

திருச்சி,

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு பேசியதாவது:-

விழிப்புணர்வு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள், நகர்ப்புற சுகாதார ஆய்வாளர்கள் டெங்கு மற்றும் நீரினால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.

நீரினால் பரவும் காய்ச்சல்கள், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டும். டெங்கு மற்றும் நீரினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகளான கொசுப்புழு ஒழிப்பு மற்றும் முதிர்கொசுக்களை ஒழிக்க வேண்டும். நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட வேண்டும். தொற்று நீக்கம் செய்யப்பட்ட (குளோரினேசன்) பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை அந்தந்த துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். குழாய்களில் உடைப்பு ஏற்பட்டிருப்பின் அவற்றை சரிசெய்தல், தரைமட்டத்திற்கு கீழாக பள்ளத்தினுள் உள்ள குடிநீர் இணைப்புகள் இருப்பின் அவற்றின் மூலம் ஏற்படும் நீர் மாசுபாடுகளை களைதல் வேண்டும்.

புகை அடிக்கும் எந்திரம்

ஒவ்வொரு கிராம ஊராட்சி செயலாளர்களும் அவரவர் பகுதிகளில் தேக்கமடையும், தேவையற்ற பொருட்களை அகற்றுவது குறித்தும், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்குவின் தாக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சரியாக செய்ய வேண்டும். மேலும் புகை அடிக்கும் எந்திரங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் அனைத்து ஊராட்சிக்கும் வழங்கப்படும். ஏற்கனவே பழுதடைந்துள்ள புகை அடிக்கும் எந்திரத்தினை சரிசெய்து கொள்ளவும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் சுப்பிரமணி, மாநகராட்சி நகர் நல அதிகாரி ஜெகநாதன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) தண்டபாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், மாநகராட்சி முதன்மை பொறியாளர் அமுதவள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story