பயன்படாத ஆழ்துளை கிணறுகள் எத்தனை? அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


பயன்படாத ஆழ்துளை கிணறுகள் எத்தனை? அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 9:55 PM GMT)

பயன்படாத ஆழ்துளை கிணறுகள் எத்தனை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் பயன்படாத நிலையிலுள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கி பேசியதாவது:- பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கனமழை சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

அதில், எளிதில் மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ளதாக 39 பகுதிகள் கண்டறியப்பட்டன. இந்த பகுதிகளில் மழைநீர் எளிதில் வடிந்தோட ஏதுவாக தற்காலிக கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் அனைத்தும் 15 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டன. இதேபோல அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்காலிக வடிகால்

கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஒருசில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு சார்ந்த அலுவலர் குழுக்கள் மூலமாக உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நடப்பு (நவம்பர்) மாதத்திலும் அதிக அளவில் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்கு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு தேங்கும் மழைநீரை தற்காலிக வடிகால் அமைத்து அருகிலுள்ள கண்மாய், ஊருணி, குளங்களில் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழுள்ள கண்மாய்கள், ஊரக வளர்ச்சி துறையின் கீழுள்ள கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் உள்ள தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளின் கரைகளை தொடர்ந்து ஆய்வு செய்து உடைப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதே வேளையில் அவசர சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக போதிய அளவு மணல் மூடைகள், சவுக்கு மரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆழ்துளை கிணறுகள்

மேலும் மாவட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து அவற்றில் பயன்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் எத்தனை உள்ளன, அவற்றை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்ந்த அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் பயன்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய் வட்டங்கள் வாரியாகவும், ஊராட்சிகள் வாரியாகவும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்திரன், வேளாண்மை இணை இயக்குனர் சொர்ணமாணிக்கம், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஆரோக்கியராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோபு, சேக்அப்துல்லா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சாமிராஜ் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story