கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்


கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 3 Nov 2019 5:49 PM GMT)

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கோத்தகிரி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்ல குன்னூர் வழியாக பிரதான சாலை உள்ளது. மேலும் கோத்தகிரி வழியாக மற்றொரு சாலை உள்ளது. சீசன் காலங்களில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு வரும் வாகனங்கள் திரும்பி செல்ல வேண்டுமானால் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாகத்தான் மேட்டுப்பாளையத்தை அடைய முடியும். அந்த வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். சில நேரங்களில் குன்னூர் வழியாக செல்லும் சாலையில் கனமழை காரணமாக இயற்கை பேரிடர் நிகழ்ந்தால் கோத்தகிரி வழியாகவே போக்குவரத்து திருப்பி விடப்படும்.

எனவே கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் அந்த சாலை, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதையொட்டி கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மற்றும் பழுதடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தவிட்டுமேடு பகுதியில் பழுதடைந்து இருந்த சுமார் 10 மீட்டர் நீள தடுப்புச்சுவரை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சாமிநாதன் கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் தவிட்டுமேடு பகுதியில் பழுதடைந்து இருந்த 2 தடுப்புச்சுவர்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வடகிழக்கு பருவமழையும் பெய்து வருவதால், மண் சரிவு ஏற்படும் இடங்களில் அடுக்கி வைக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சாலைகளில் மரங்கள் விழுதல், மண் சரிவு ஏற்படுதல் போன்றவை நிகழ்ந்தால் உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சாலையோரத்தில் உள்ள மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story