சீர்காழி அருகே மின்னல் தாக்கி 4 பேர் காயம்


சீர்காழி அருகே மின்னல் தாக்கி 4 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 8:16 PM GMT)

சீர்காழி அருகே மின்னல் தாக்கியதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களை நேரில் சந்தித்து பாரதி எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

சீர்காழி,

சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை திடீரென கொள்ளிடம் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கொள்ளிடம் நல்லவிநாயகபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் கண்ணு (வயது 55) என்பவர் வீட்டின் அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை மின்னல் தாக்கியது. இதில் காயம் அடைந்த கண்ணுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேபோல் தைக்கால் மேலவல்லம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (53). இவருடைய வீடு மின்னல் தாக்கியதில் சேதமடைந்தது. மேலும் வீட்டில் இருந்த சுந்தரமூர்த்தி, அவருடைய மனைவி எழிலரசி (45), மகள் நிஷாந்தி (16) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாரதி எம்.எல்.ஏ. ஆறுதல்

இதுகுறித்து தகவல் அறிந்த பாரதி எம்.எல்.ஏ., மின்னல் தாக்கியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உரிய சிகிச்சைகளை அளிக்குமாறு டாக்டரை எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார். பின்னர் அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி கிடைக்க உதவிகள் செய்யப்படும் எனவும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, பேரவை செயலாளர் மணி, கூட்டுறவு சங்க இயக்குனர் ரவிசண்முகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதேபோல் சீர்காழி தாசில்தார் சாந்தி, மின்னல் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அரசு சார்பில் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story