கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் கோரிக்கை


கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Nov 2019 10:45 PM GMT (Updated: 3 Nov 2019 9:49 PM GMT)

கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

திருச்சி,

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் குருசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மகாதானபுரம் ராஜாராம், காந்திபித்தன், தீட்சிதர் பாலசுப்பிரமணியன், கவுண்டம்பட்டி சுப்பிரமணியன் (காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கம்), புலியூர் நாகராஜன் (தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய அணி) உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி ஒருங்கிணைப்பாளர் குருசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காளேஸ்வரம்-கோதாவரி ஆறு நீரேற்று திட்டம்

தெலுங்கானா அரசின் பிரசித்தி பெற்ற திட்டமான காளேஸ்வரம்- கோதாவரி ஆறு நீரேற்று திட்டம் ரூ.82 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் உபரி கோதாவரி நீர் தெலுங்கானா மாநிலத்தின் வறட்சி பாதித்த மேட்டு பகுதிகளுக்கு சுமார் 310 மீட்டர் உயரத்திற்கு 11 குழாய்களில் மேல் ஏற்றி அங்கிருந்து ஒரு செயற்கை ஆற்றை சுமார் 150 கி.மீ நீளம் கோதாவரி ஆற்றுக்கு சமமாக ஏற்படுத்தி உள்ளனர்.

இதன் மூலம் 18½ லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நவீன தொழில் நுட்பம் மூலம் உருவாக்கி உள்ளனர். இதுபோன்ற ஒரு பெரும் திட்டத்தை தமிழகத்தில் உள்ள காவிரி, கொள்ளிடம் மற்றும் 17 கிளை வாய்க்கால் களையும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்

கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை புதிய தொழில் நுட்பத்துடன் செயல்படுத்த வேண்டும். கோதாவரி தண்ணீரை சென்னை அருகே உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தில் இணைப்பதற்கு பதிலாக காவிரியின் கிளை வாய்க்காலான கட்டளையில் மாயனூர் பகுதியில் இணைக்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றின் இருபுறமும் ஏற்கனவே உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தியும், புதிய நீர் நிலைகளை உருவாக்கியும் கோதாவரியில் இருந்து வரும் நீரையும் பயன்படுத்தி 0.05 டி.எம்.சி. முதல் 10 டி.எம்.சி. வரை சேமிக்கும் வகையில் நீர் நிலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இதற்காக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சர்கள் மற்றும் நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை தொழில் நுட்ப ரீதியாக விளக்குவதற்காக எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்திக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story