மங்கலம் பகுதியில், பலத்த மழையால் 2 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது


மங்கலம் பகுதியில், பலத்த மழையால் 2 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 3 Nov 2019 10:15 PM GMT (Updated: 3 Nov 2019 11:51 PM GMT)

மங்கலம் பகுதியில் பெய்த பலத்த மழையால் 2 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

மங்கலம், 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பஞ்சலிங்க அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது. நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதை தவிர காட்டாற்று வெள்ளம் மூலம் ஆங்காங்கே உள்ள குளம் மற்றும் குட்டைகளும் நிரம்பி வருகிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 5 மணி முதல் 6 மணி வரை மங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக பூமலூர், நடுவேலம்பாளையம், பள்ளிபாளையம், இச்சிப்பட்டி, 63 வேலம்பாளையம், ஊஞ்சப்பாளையம் போன்ற பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் ஊஞ்சப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் தாழ்வான பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் இந்த இரண்டு வீடுகள் குளம் போல் காட்சி அளித்தது. இந்த வீடுகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.

மங்கலத்தை அடுத்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழிலும் நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் சோளம், கொள்ளு போன்ற பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர். 

Next Story