நாமக்கல், மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி: கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது


நாமக்கல், மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி: கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2019 10:15 PM GMT (Updated: 5 Nov 2019 1:31 PM GMT)

நாமக்கல்லில் மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற வழக்கில் கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் 5 மாதங்களுக்கு பிறகு கைது செய்து உள்ளனர்.

நாமக்கல், 

நாமக்கல் அன்புநகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி வளர்மதி (வயது 51). இவர்களது மகள் ரூபிகாவுக்கும் (30), கரூர் மூலிமங்கலம் பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சிவபிரகாசம் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி சிவபிரகாசம் மற்றும் அவரது மனைவி ரூபிகா ஆகியோருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்ட மாமனார் தங்கவேலுவை சிவபிரகாசம் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தங்கவேல் இறந்து விட்டார்.

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார் சிவபிரகாசத்தை கைது செய்தனர். இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த அவர் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து உள்ளார். ஆனால் ரூபிகா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி அதிகாலை நாமக்கல் அன்புநகர் வந்த சிவபிரகாசம், ரூபிகா வீட்டின் அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து 2 வயர்களை 5 அடி நீள கம்பியுடன் இணைத்து படுக்கை அறை வழியாக மனைவி ரூபிகா மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாமியார் வளர்மதி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் சிவபிரகாசத்தை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சிவபிரகாசம் கரூர் செல்வதற்காக நாமக்கல் பஸ்நிலையத்தில் காத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சிவபிரகாசத்தை கைது செய்தனர்.

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த சிவபிரகாசத்தை 5 மாதங்களுக்கு பிறகு கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.


Next Story