பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது ஆட்டோ ஏறியதில் பெண் பலி தாய்-குழந்தைகள் உள்பட 3 பேர் காயம்


பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது ஆட்டோ ஏறியதில் பெண் பலி தாய்-குழந்தைகள் உள்பட 3 பேர் காயம்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:15 PM GMT (Updated: 5 Nov 2019 8:12 PM GMT)

சென்னை சென்டிரல் அருகே அதிகாலையில் நிலைதடுமாறி வந்த ஆட்டோ பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது ஏறி இறங்கிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 60). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று அதிகாலையில் சென்னை சென்டிரலிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மூலக்கொத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வால்டாக்ஸ் ரோடு அருகே வந்தபோது, திடீரென சாலையில் சென்ற நாய் ஒன்று ஆட்டோவின் குறுக்கே பாய்ந்தது. இதனால் காளியப்பன் நிலை தடுமாறியதில், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.

இந்த விபத்தில், வால்டாக்ஸ் ரோட்டை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி அஞ்சலி (46) சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மனைவி சித்ரா (39), அவர்களது மகள் பவானி (11), மகன் பரன் (13) ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து தகவலறிந்த யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பலியான அஞ்சலியின் உடலை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான ஆட்டோ டிரைவர் காளியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.


Next Story