காதல் திருமணம் செய்த வாலிபர் கழுத்தறுத்து படுகொலை ஆணவக்கொலையா? போலீசார் விசாரணை


காதல் திருமணம் செய்த வாலிபர் கழுத்தறுத்து படுகொலை ஆணவக்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Nov 2019 11:15 PM GMT (Updated: 5 Nov 2019 8:23 PM GMT)

சென்னை துரைப்பாக்கம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கத்தியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது ஆணவக்கொலையா? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 24). இவர் துரைப்பாக்கம் அருகே உள்ள காரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை துரைப்பாக்கம் அருகே காரப்பாக்கம் பெரியபாளையத்தம்மன் தெருவில் உள்ள டீக்கடையில் நண்பர்களுடன் முரளி டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று முரளியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பியோடி விட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனே முரளியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முரளி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆணவக்கொலையா?

இது குறித்து கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பின்னர், முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற மர்மநபர் யார்? என விசாரித்து வருகின்றனர். திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிகள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இந்த சம்பவம் ஆணவக் கொலையா? அல்லது முன்விரோதமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தனிப்படை போலீசார் வலை

ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், முரளி ஏற்கனவே பணியாற்றி வந்த நிறுவனத்தில் பெண் ஒருவரை காதலித்து வந்ததும், அந்த பெண்ணின் தொடர்பை துண்டித்ததால் கவுசல்யாவை காதலித்து 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துக் கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, முன்னாள் காதலிக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ள நிலையில், அவருடன் முரளி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், இதையறிந்த அவரின் கணவன் முரளியை கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து கொலையாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் கொலையாளியை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story