மனைவியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 6 Nov 2019 7:34 PM GMT)

முத்தையாபுரத்தில் மனைவியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு தேவிநகரை சேர்ந்தவர் கணேசன் என்ற சின்னவன் (வயது 46). இவருடைய மனைவி அய்யம்மாள் (37). இவர்கள் 2 பேரும் உப்பள தொழிலாளியாக வேலைபார்த்து வந்தனர்.

அப்போது, அய்யம்மாளுக்கும், அவருடன் உப்பளத்தில் வேலை பார்க்கும் தங்கவேலு என்பவருக்கும் பழக்கம் இருந்து உள்ளது. இதனை கணேசன் கண்டித்தார். அதேபோல் தங்கவேலுவின் உறவினர்களான பழனிமுருகன் (29), சந்தனமாரி (25), வள்ளிமயில் (45) ஆகியோர் அய்யம்மாளை கண்டித்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 28-6-2013 அன்று அய்யம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கணேசன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து அய்யம்மாள் மீது ஊற்றி தீவைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த அய்யம்மாள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 2-7-2013 அன்று பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து கணேசன் மற்றும் பழனிமுருகன், சந்தனமாரி, வள்ளிமயில், தங்கவேலு ஆகியோர் மீது முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோமதி மணிகண்டன் ஆஜர் ஆனார்.

Next Story