சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும்; அசோக் சவான் கூறுகிறார்


சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும்; அசோக் சவான் கூறுகிறார்
x
தினத்தந்தி 7 Nov 2019 12:26 AM GMT (Updated: 7 Nov 2019 12:26 AM GMT)

சிவசேனா ஆட்சியமைக்கஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும் என அசோக் சவான் கூறியுள்ளார்.

மும்பை, 

பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையேயான முதல்-மந்திரி பதவி போட்டியால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நெருக்கடியில் உள்ளனர். பொருளாதார நிலைமை நன்றாக இல்லை.

சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டாகத் தான் முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறி விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி. உசேன் தல்வாய் நேற்று சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை நேரில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

பின்னர் உசேன் தல்வாய் கூறுகையில், “பாரதீய ஜனதாவை ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். நான் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்திடம் மிகவும் சாதகமான கலந்துரையாடலை நடத்தினேன்” என்றார்.

சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கவேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு இவர் ஏற்கனவே கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. 

Next Story