கிள்ளை அருகே, பெண், தூக்குப்போட்டு தற்கொலை


கிள்ளை அருகே, பெண், தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Nov 2019 10:39 PM GMT (Updated: 7 Nov 2019 10:39 PM GMT)

கிள்ளை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பரங்கிப்பேட்டை,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜன் மகள் செந்தமிழ்செல்வி(வயது 24). இவருக்கும், கிள்ளை அருகே உள்ள பொன்னந்திட்டை சேர்ந்த பாரதிராஜா(27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பாரதிராஜா வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சொந்த ஊர் திரும்பினார்.

அப்போது பாரதிராஜாவுக்கும், செந்தமிழ்செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி, வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தமிழ்செல்வியின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை நாகராஜன் கிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செந்தமிழ்செல்விக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமையால் அவர் இறந்தாரா? என சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story