திருச்சியில், எலி மருந்து சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலை முயற்சி - காதல் விவகாரம் காரணமா? போலீசார் விசாரணை


திருச்சியில், எலி மருந்து சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலை முயற்சி - காதல் விவகாரம் காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 2:41 PM GMT)

திருச்சியில் எலி மருந்து சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றார். இதற்கு காதல் விவகாரம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கே.கே.நகர், 

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பர்சிலின்பானு (வயது 19). இவர் கடந்த ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வரும் இவர், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை பர்சிலின்பானு வீட்டில் எலிமருந்தை (பேஸ்ட்) சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அவருடன் தங்கியுள்ள மற்றொரு பெண் போலீஸ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பர்சிலின்பானுவை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் பர்சிலின்பானுக்கு, மாவட்ட ஆயுதப்படையில் டிரைவராக பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஒருவருடன் காதல் இருந்து வந்ததாகவும், இவர்கள் இருவருக்குள் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் மனவேதனை அடைந்த அவர் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story