குலசேகரம் அருகே பரபரப்பு சமையல் அறையில் பிணமாக தொங்கிய புதுப்பெண் போலீசார் விசாரணை


குலசேகரம் அருகே பரபரப்பு சமையல் அறையில் பிணமாக தொங்கிய புதுப்பெண் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Nov 2019 10:15 PM GMT (Updated: 9 Nov 2019 3:18 PM GMT)

குலசேகரம் அருகே சமையல் அறையில் புதுப்பெண் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குலசேகரம்,

குலசேகரம் அருகே தாழமூட்டுவிளை, அயக்கோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருக்கும், கேரள மாநிலம் எரிமேலி பகுதியை சேர்ந்த சோபனா (40) என்பருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு சோபனா, அயக்கோட்டில் உள்ள தனது கணவர் வீட்டில் தங்கியிருந்தார்.

கணவன்–மனைவி இடையே கடந்த சில வாரங்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், சோபனா மனமுடைந்து காணப்பட்டார்.

தூக்கில் பிணம்

நேற்று முன்தினம் இரவு மகேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற போது, சமையல் அறையில் சோபனா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள் புதுப்பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பிணத்தை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் தக்கலை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story