உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் அமைச்சர் காமராஜ் பேச்சு


உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் அமைச்சர் காமராஜ் பேச்சு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 6:38 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என திருவாரூரில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

கொரடாச்சேரி,

திருவாரூரில் அ.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர். கே.கோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியினை பெற்றதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களுக்கும், வெற்றிக்கு உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்

இந்த வெற்றி உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுதேர்தலுக்கு முன்னோட்டமானது. இனி தொடர்ந்து அ.தி.மு.க. வெற்றி பெறும். எனவே தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி தீவிர களப்பணியாற்றி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம். எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் துயரங்களை வைத்து பொய் பிரசாரம் செய்து, மக்களை குழப்பி அதன்மூலம் அரசியல் லாபம் கிடைக்காதா என நினைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சருக்கு வாழ்த்து

கூட்டத்தில் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன் நினைவாக அந்நாளை தமிழ்நாடு நாள் என அறிவித்து விழா எடுத்ததற்கும், ஊராட்சி தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கான தீர்வினையும் உடனடியாக வழங்கிடும் மக்களை தேடி அரசு என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருவதற்கும், மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் ஆகியோர்களின் சந்திப்புக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்ததற்காகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் டாக்டர் பட்டம் பெற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் பொன்வாசுகிராமன், பன்னீர்செல்வம், பாப்பாத்திமணி, முகமதுஅஷரப், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவர் அன்பு, திருவாரூர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், கட்சியின் பிற அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் பி.கே.யு.மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story