தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Nov 2019 10:45 PM GMT (Updated: 9 Nov 2019 7:29 PM GMT)

ஒரு டன் கரும்பிற்கு தமிழக அரசு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்க உறுப்பினர் அண்ணாதுரை வரவேற்றார். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர்கள் ஜோதிராமன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஒரு டன் கரும்பிற்கான விலை ரூ.4 ஆயிரம் என தமிழக அரசு அறிவித்திட வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டியுள்ள நிலுவைத்தொகை ரூ.200 கோடியை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம்

கோத்தாரி சர்க்கரை ஆலையில் வெளியேறும் கரும்பு அழுக்கை கரும்பு விவசாயிகளுக்கே இலவசமாக வழங்க வேண்டும். அரசு சர்க்கரையினை கிலோவுக்கு ரூ.25-க்கு வழங்க வேண்டும். நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம் அறிவித்திட வேண்டும். அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 கையூட்டாக வாங்குவதை தடுத்து நிறுத்தி, கூலி செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்ட தலைவர் மணியன், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story