பீடி கேட்டு கொடுக்காததால் கோபம்: தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபர் கைது


பீடி கேட்டு கொடுக்காததால் கோபம்: தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2019 10:30 PM GMT (Updated: 9 Nov 2019 9:36 PM GMT)

திருப்பூரில் பீடி கேட்டு கொடுக்காததால் கோபத்தில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர், 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் வீரபத்திரன். கட்டிட தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் கே.வி.ஆர்.நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய மகன் மருதுபாண்டி(வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 7-ந் தேதி இரவு மருதுபாண்டி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை கே.ஆர்.ஆர்.தோட்டத்தில் உள்ள மாநகர சுகாதார நிலையம் முன்பு தலையில் கல்லால் தாக்கி மருதுபாண்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தியிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கே.வி.ஆர். நகரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளியான கார்த்தியை(19) போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், சம்பவத்தன்று இரவு மருதுபாண்டி, மாநகர சுகாதார நிலையம் அருகே அமர்ந்து பீடி குடித்துக்கொண்டு இருந்துள்ளார். அந்த நேரத்தில் அவருடைய நண்பரான கார்த்தியும் அங்கு சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது கார்த்தி, மருதுபாண்டியிடம் ஒரு பீடி கேட்டுள்ளார். பீடி கொடுக்க மறுத்ததுடன் கார்த்தியை தகாத வார்த்தையால் மருதுபாண்டி திட்டியுள்ளார். இதில் கோபமடைந்த கார்த்தி, அங்கு கிடந்த கல்லை எடுத்து மருதுபாண்டியின் தலையில் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கார்த்தியை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story