பொன்மலைப்பட்டியில் கை அறுக்கப்பட்ட நிலையில் தூக்கில் பெண் பிணம் போலீசார் விசாரணை


பொன்மலைப்பட்டியில் கை அறுக்கப்பட்ட நிலையில் தூக்கில் பெண் பிணம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Nov 2019 10:15 PM GMT (Updated: 10 Nov 2019 5:53 PM GMT)

பொன்மலைப்பட்டியில் கை அறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி பொன்மலைப்பட்டி கீழஉடையார் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி சுபாஷினி (வயது 30). இவர், தனது தாய் மாமாவையே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. பரமசிவம், சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கணவருடன் சுபாஷினி சென்னையில் வசித்து வந்தார்.

அப்போது கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்துக்கொண்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு பொன்மலைப்பட்டிக்கு வந்து விட்டார்.

இந்நிலையில் உறவுக்கார பெண் ஒருவருக்கு திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்திருந்ததால் நேற்று முன்தினம் அனைவரும் அங்கு சென்று விட்டனர். நேற்று காலை 6 மணியளவில் அவர்கள் வீடு திரும்பியபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அவருடைய உறவினர் அன்பழகன் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து அனைவரும் உள்ளே சென்றனர். அப்போது, வீட்டில் சுபாஷினி புடவையால் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது இடது கையின் மணிக்கட்டில் பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பொன்மலை போலீசாருக்கு அன்பழகன் தகவல் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுபாஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரை பிரிந்த துயரத்தில் சுபாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டு இருந்தாலும் அவரது இடது கை மணிக்கட்டு பகுதியில் பிளேடால் அறுக்கப்பட்டு இருப்பது ஏன்? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே, அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுபாஷினிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் பொன்மலை அனைத்து மகளிர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story