உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி ; விவசாயிகள் கவலை

உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உப்புக்கோட்டை,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி, முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி, கத்தரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட அனைத்து வகையான காய் கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அனைத்து பருவத்திலும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுவதே இப்பகுதியின் சிறப்பம்சம் ஆகும்.
இந்த பகுதியில் முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் செய்யப்படும் காய்கறிகள் நல்ல விளைச்சல் அடைந்து, சுவையாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காய்கறிகளை வாங்குவதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உப்புக்கோட்டை பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி கடந்த மாதம் சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது தக்காளி பறிக்கப்பட்டு விற்பனைக்காக தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. போதிய பாசன வசதி மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் தக்காளி நன்றாக விளைச்சல் அடைந்து உள்ளது. அதே நேரம் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






