இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Nov 2019 11:15 PM GMT (Updated: 20 Nov 2019 5:08 PM GMT)

தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு, தனது கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் துலுக்கர்குளத்தை சேர்ந்தவர் ஊர்க்காவலன். இவருடைய மகன் ரமே‌‌ஷ்பாபு (வயது 29). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள தனியார் அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

அதே நிறுவனத்தில் தெற்கு வீரபாண்டியபுரம் கீழத்தெருவை சேர்ந்த முருகன் மனைவி பகவதி (29) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் பழகி வந்தனர்.

கழுத்து அறுப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகவதி, அந்த நிறுவனத்தில் இருந்து விலகி, அதே பகுதியில் உள்ள மற்றொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையேயான பழக்கம் குறைந்தது. நேற்று மதியம் 12 மணி அளவில் ரமே‌‌ஷ் பாபு, பகவதியின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் முன்பு ரமே‌‌ஷ்பாபுவும், பகவதியும் பேசிக் கொண்டு இருந்தனர்.அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமே‌‌ஷ்பாபு, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் பகவதியின் கழுத்தில் குத்தினார். மேலும், அவரது கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் பகவதி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே ரமே‌‌ஷ் பாபு தனது கழுத்தையும் கத்தியால் அறுத்துக் கொண்டார். இதனால் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்தனர்.

சாவு

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், 2 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே ரமே‌‌ஷ்பாபு பரிதாபமாக உயிரிழந்தார். பகவதிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும், சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த பயங்கர சம்பவத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story