ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்


ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 7:02 PM GMT)

ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

மன்னார்குடி,

மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு நீர்வளம் மற்றும் ஆறுகள் சீரமைப்பு மேம்பாட்டு கழகம் அமைத்துள்ளதற்கு நன்றியை தெரிவித்து கொள்வது. ராசிமணல் அணை திட்டத்தை உடன் நிறைவேற்ற வேண்டும்

மணல் கொள்ளை

தமிழகத்தில் பாசன உரிமைகள், விதிமுறைகளை அரசே மீறுவதை கைவிட வேண்டும். பொதுப்பணித்துறை காலிப்பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். தமிழகம் முழுவதும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் நடப்பாண்டு 40 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 60 சதவீத பணிகளை வருகிற பிப்ரவரி மாதமே தொடங்க வேண்டும்.

காவிரி மற்றும் அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கவுரவ தலைவர் நீலன்.அசோகன், அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர்கள் ராமதாஸ் (நாகை), மணி (தஞ்சை), மாவட்ட தலைவர்கள் பாஸ்கரன், சுப்பையன், அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story