நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் குத்திக்கொலை கணவர் கைது


நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் குத்திக்கொலை கணவர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2019 11:55 PM GMT (Updated: 23 Nov 2019 11:55 PM GMT)

தேவாரத்தில், நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் தேவாரம் நாடார் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 38). அவருடைய மனைவி ராஜேஸ்வரி (29). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சண்முகமும், ராஜேஸ்வரியும் கேரள மாநிலம் பாரத்தோடு அருகே கூட்டாறு என்ற இடத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் தங்கியிருந்து கூலிவேலை பார்த்து வந்தனர்.

இவர்களின் 2 மகன்களும், தேவாரம் வடக்கு தெருவில் உள்ள ராஜேஸ்வரியின் தந்தை வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். மகன்களை பார்ப்பதற்காக வாரத்துக்கு ஒருமுறை கணவனும், மனைவியும் தேவாரத்துக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சண்முகம் தனது மனைவியுடன் வழக்கம் போல் மாமனார் வீட்டுக்கு வந்தார்.

அப்போது தம்பதியினருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சண்முகம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஸ்வரியை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்து போன ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.

இதைப்பார்த்த சண்முகம் அங்கிருந்து ஓடிவிட்டார். இதற்கிடையே அங்கு வந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள், உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன், தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிரு‌‌ஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இதிரிஸ்கான் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கேரளாவுக்கு தப்பிச்செல்வதற்காக, தேவாரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சண்முகத்தை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது மனைவி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்திக்கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவரே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story