திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்


திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 27 Nov 2019 11:00 PM GMT (Updated: 27 Nov 2019 7:09 PM GMT)

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் இன்று (வியாழக்கிழமை) உதயமாகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டம் 1797.92 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 மக்கள் தொகையை கொண்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 2234.32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 12 லட்சத்து 10 ஆயிரத்து 277 மக்கள் தொகையை கொண்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் வருவாய் கோட்டமும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆம்பூர் வருவாய் கோட்டமும் உள்ளது. திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தாலுகாக்களும் அடங்கி உள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டமும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரக்கோணம் வருவாய் கோட்டமும் உள்ளது. ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம், நெமிலி ஆகிய தாலுகாக்களும் அடங்கி உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 பிர்க்காக்கள், 195 வருவாய் கிராமங்கள், 207 கிராம ஊராட்சிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 பிர்க்காக்கள், 330 வருவாய் கிராமங்கள், 288 கிராம ஊராட்சிகளும் உள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டம் 35-வது மாவட்டமாகவும், ராணிப்பேட்டை மாவட்டம் 36-வது மாவட்டமாகவும் இன்று (வியாழக்கிழமை) உதயமாகிறது. திருப்பத்தூர் மாவட்ட தொடக்கவிழா திருப்பத்தூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கவிழா ராணிப்பேட்டை கால்நடை நோய்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் பகல் 12 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசுகிறார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடிப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு புதிய மாவட்டங்களை தொடங்கிவைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கிவைக்கிறார். ரூ.184 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

புதிய மாவட்டங்கள் தொடக்கவிழாவுக்காக திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் பிரம்மாண்ட மேடைகளும், பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ் தலைமையில், வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவேஷ்குமார், விஜயக்குமார், மயில்வாகனன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் வருகையை யொட்டி திருப்பத்தூர், ராணிப்பேட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

Next Story