ஆஸ்பத்திரி பெயரில் போலி ரசீது தயாரித்து ரூ.2 லட்சம் மோசடி டிரக்கர் உரிமையாளர் கைது


ஆஸ்பத்திரி பெயரில் போலி ரசீது தயாரித்து ரூ.2 லட்சம் மோசடி டிரக்கர் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2019 11:15 PM GMT (Updated: 27 Nov 2019 7:52 PM GMT)

நண்பரின் உடல் நிலையை காரணம் காட்டி வாட்ஸ் அப் மூலம் நிதி திரட்டியதுடன், ஆஸ்பத்திரி பெயரில் போலி ரசீது தயாரித்து ரூ.2 லட்சம் மோசடி செய்த டிரக்கர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

ஆரல்வாய்மொழி,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(வயது 31), டிரைவர். திசையன்விளை அருகே தங்கம்மாள்புரம் முதுமொத்தன்மொழியை சேர்ந்தவர் சாம்பென்னட்(38). இவருடைய டிரக்கர் வாகனத்தில் முருகன் சில ஆண்டுகள் டிரைவராக வேலை செய்து வந்தார். இதனால், இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

முருகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால், வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும், இதற்காக பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த சாம்பென்னட் ராதாபுரம் சென்று முருகனை சந்தித்து பேசினார். அப்போது, சாம்பெனட் நாகர்கோவில் தனக்கு தெரிந்த தனியார் ஆஸ்பத்திரி உள்ளதாகவும், அங்கு சிகிச்சை எடுத்தால் விரைவில் குணமாகி விடும் என்று கூறினார். அதைகேட்ட முருகன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

அப்போது, சாம்பென்னட் தன்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. அதன்படி 'வாட்ஸ்-அப்' மூலம் உனது பெயர், முகவரி, வங்கி எண், சிகிச்சைக்கு தேவையான தொகை ஆகிய விவரங்களை பகிர்ந்து கொண்டால் பலர் பண உதவி அளிப்பார்கள் என்று கூறினார்.

அவர் கூறியதை நம்பிய முருகன் கடந்த ஆகஸ்்டு மாதம் நாகர்கோவிலில் உள்ள பிரபலமான ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்ந்தார். அப்போது சாம்பென்னட், முருகனிடம் அவரது வங்கி புத்தகம், ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டார். மேலும், அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

இதற்கிடையே பலர் முருகனின் வங்கி கணக்கில் பணம் செலுத்தினார்கள். அவ்வப்போது, சாம்பென்னட் மருந்து ரசீதை காட்டி பணம் கட்ட வேண்டும் என்று முருகனின் ஏ.டி.எம். அட்டை மூலம் பணத்தை எடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு செலுத்தினார்.

அதன்பிறகு முருகன் 15 நாட்கள் சிகிச்சை எடுத்தபின் வீடு திரும்பினர். 10 நாட்களுக்கு ஒரு முறை முருகனை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருவதும், பணத்தை செலுத்துவதையும் சாம்பென்னட் வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில் கடந்த வாரம் முருகனை சிகிச்சைக்கு அழைத்து செல்ல சாம்பென்னட் வரவில்லை. இதனால், முருகனின் தாயார் அவரை நாகர்கோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அப்போது, டாக்டர் முருகனை பரிசோதனை செய்தபோது, அவரது தாயார் லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்தும் குணமாகவில்லையே என்று ஆதங்கத்துடன் டாக்டரிடம் கேட்டார்.

அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர் லட்சக்கணக்கில் எங்கே பணம் செலுத்தினார்கள். சில ஆயிரங்கள் மட்டுமே ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு செலுத்தியதாக கூறினார். அந்தநேரத்தில் அங்கு வந்த சாம்பென்னட்டும் டாக்டரிடம் வாதாடினார். அப்போது, டாக்டர் பணம் செலுத்திய ரசீதுகளை தரும்படி கூறினார். பின்னர், அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

முருகனின் தாயார் கொடுத்த ரசீதுகளை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சரிபார்த்தனர். அப்போது ரூ.22 ஆயிரத்து 400 என ஆஸ்பத்திரியின் பெயரில் 8 ரசீது தயாரித்ததும், மேலும் பல ரசீதுகளில் ரூ.900 என இருந்தால், அந்த எண்ணுக்கு முன் 22 என எழுதி ரூ.22 ஆயிரத்து 900 ஆக மாற்றியது தெரியவந்தது. இப்படி முருகனிடம் இருந்து ரூ.2 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சாம்பென்னட்டை ஆஸ்பத்திரிக்கு வருமாறு நிர்வாகத்தினர் அழைத்தனர்.

அதன்படி வந்த சாம்பென்னட்டை நிர்வாகத்தினர் மடக்கிப்பிடித்து ஆரல்வாய்மொழி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி மேலாளர் ஜெயக்குமார் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்பென்னட்டை கைது செய்தனர்.

Next Story