ஈரோடு மார்க்கத்தில் இயக்கப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாமக்கல், சேலம் வழியாக இயக்கம்


ஈரோடு மார்க்கத்தில் இயக்கப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாமக்கல், சேலம் வழியாக இயக்கம்
x
தினத்தந்தி 27 Nov 2019 11:00 PM GMT (Updated: 27 Nov 2019 8:24 PM GMT)

ஈரோடு மார்க்கத்தில் இயக்கப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு தென் மாவட்ட பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சூரமங்கலம்,

சேலம் ரெயில்வே கோட்டத்தில் சேலம்-நாமக்கல்-கரூர் இடையே புதிதாக 85 கிலோ மீட்டருக்கு அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையில் மிக குறைவான அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-பழனி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மற்றும் சேலம்-கரூர் பயணிகள் ரெயில் ஆகியவை மட்டும் சேலம், நாமக்கல் வழியாக சென்று வருகிறது.

அதேபோல், மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து நாகர்கோவில் மற்றும் நெல்லையில் இருந்து புறப்படும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கரூர்-ஈரோடு, சேலம் மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களை கரூர்-நாமக்கல்-சேலம் மார்க்கம் வழியாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ்

அந்த வகையில், நாகர்கோவில்-மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16340, 16339), திருநெல்வேலி-மும்பை தாதர் சாளுக்கியா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-11022, 11021) இரு மார்க்கத்திலும் ஈரோடு வழியாக செல்வதற்கு பதிலாக கரூர்-நாமக்கல்-சேலம் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16340) வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது.

இந்த ரெயில், வருகிற (டிசம்பர்) 2-ந் தேதியில் இருந்து கரூர்-நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16339) டிசம்பர் 1-ந் தேதி முதல் சேலத்தில் இருந்து ஈரோடு செல்லாமல் நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்படும்.

பயணிகள் வரவேற்பு

இதேபோல், திருநெல்வேலி-மும்பை தாதர் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-11022) வாரந்தோறும் திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் கரூரில் இருந்து ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக, கரூர்-நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும். இந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் ஈரோடு செல்லாமல் நாமக்கல் வழியாக சேலத்திற்கு வந்து செல்வதால் சுமார் 1 மணி நேரம் மிச்சமாகிறது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து நாமக்கல், சேலம், தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டங்களில் வசிக்கும் தென் மாவட்ட பயணிகள் ரெயில் நிர்வாகத்தின் இந்த முடிவை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story