இறந்த ரெயில்வே ஊழியரின் உடலை பார்க்க 2-வது மனைவிக்கு எதிர்ப்பு முதல் மனைவி மீது போலீசில் புகார்


இறந்த ரெயில்வே ஊழியரின் உடலை பார்க்க 2-வது மனைவிக்கு எதிர்ப்பு முதல் மனைவி மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 28 Nov 2019 10:15 PM GMT (Updated: 28 Nov 2019 10:21 PM GMT)

சேலத்தில் இறந்த ரெயில்வே ஊழியரின் உடலை பார்க்க 2-வது மனைவிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், முதல் மனைவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 59). இவர், ரெயில்வேயில் டிராக் மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியின் பெயர் ஜமுனாதேவி. இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

2-வது மனைவியான ஓமலூர் அடுத்த சர்க்கரைப்பட்டியை சேர்ந்த அஞ்சலாதேவிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆனால் 2 மனைவிகளின் வீட்டிற்கு சுந்தரம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

எதிர்ப்பு

இந்தநிலையில், நேற்று முன்தினம் முதல் மனைவியின் வீட்டில் இருந்த சுந்தரத்திற்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த 2-வது மனைவி அஞ்சலாதேவி, கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் எனக்கூறி உறவினர்களுடன் நேற்று ஜாகீர்அம்மாபாளையத்திற்கு சென்றார்.

ஆனால் அதற்கு முதல் மனைவி ஜமுனாதேவி எதிர்ப்பு தெரிவித்து அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

போலீசில் புகார்

இதையடுத்து அஞ்சலாதேவி, தனது உறவினர்களுடன் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனுவை அளித்தார். அதில், இறந்த சுந்தரத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுடன் போலீசார் சென்று அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் 2-வது மனைவி அஞ்சலாதேவி, சுந்தரத்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story