சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது - சுருளி அருவி சாரல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது - சுருளி அருவி சாரல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 5:34 PM GMT)

சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக சுருளி அருவி சாரல் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தேனி, 

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி அருகே மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் விழா நேற்று தொடங்கியது. விழாவுக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை தாங்கி பேசினார். தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் முன்னிலை வகித்து பேசினார்.

மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். மேகமலை வன உயிரின காப்பாளர் போஸ்லே சச்சின் துக்காராம் வரவேற்று பேசினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சாரல் விழாவை தொடங்கி வைத்தார். மேலும் அவர் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 551 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 80 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சாரல் விழாவில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் சாதனைகளை விளக்கியும், அரசு திட்டங்களை விளக்கியும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த அரங்குகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய சுற்றுலா இடங்களில் அரசு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சாரல் விழா என்பது இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. சுற்றுலா துறையில் இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

தமிழகத்தில் அனைத்து துறைகளும் இன்றைக்கு எழுந்து நின்று நேரான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. மக்கள் நல்வாழ்வு துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தொழில் துறையில் இன்றைக்கு மராட்டியத்தை தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தொடர்ந்து 6-வது ஆண்டாக நெல் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் பிடித்து மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை இந்தியாவை பாதித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் பொருளாதார நிலை முன்னேற்றத்தில் உள்ளது. அதற்கு காரணம் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை திறம்பட நடத்தி வருகிறோம் என்பதே ஆகும். 2018-ம் ஆண்டு தமிழகத்துக்கு 40 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தேனி மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு 37 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசும் போது, ‘ஆசிய கண்டத்தில் சுற்றுலாவுக்கு ஏற்ற நாடு இந்தியா. இந்தியாவில் சுற்றுலாவுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு. கலைக்கும், கலாசாரத்துக்கும் பெயர் பெற்றது தமிழகம். யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட 5 உலக பாரம்பரிய சின்னங்கள் தமிழகத்தில் அமைய பெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு பல சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுற்றுலா இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.

விழாவில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், கம்பம் ஒன்றிய செயலாளர் இளையநம்பி, ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து, போடி ஒன்றிய செயலாளர் சற்குணம், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், போடி நகர செயலாளர் பழனிராஜ், சின்னமனூர் நகர செயலாளர் பி.ராஜேந்திரன், கம்பம் நகர செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ், பழனிசெட்டிப்பட்டி பேரூர் செயலாளர் தீபன்சக்கரவர்த்தி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், காமயகவுண்டன்பட்டி பேரூர் செயலாளர் திருலோகசுந்தர், க.புதுப்பட்டி பேரூர் செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, அனுமந்தன்பட்டி பேரூர் செயலாளர் சீனிவாசன், ஹைவேவிஸ் பேரூர் செயலாளர் குபேந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் டி.ஆர்.என்.வரதராஜன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் டி.கே.ஆர்.கணேசன், துணை செயலாளர் பிரகா‌‌ஷ்குமார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஆனந்தகுமார், கூடலூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதி மார்க்கண்டன், அனுமந்தன்பட்டி பேரூர் துணை செயலாளர் கணேசன், கம்பம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜா, போடி ஏலம்-காபி விவசாயிகள் சங்க தலைவர் ஜெயராமன், போடி நகர கூட்டுறவு சங்க தலைவர் ராஜா, வெற்றிலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஹரிஹரன், போடி நகர் அ.தி.மு.க. பிரமுகர் ஸ்ரீசுபா ஜெயச்சந்திரன், போடி முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் வேல்மணி காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சாரல் விழா கண்காட்சியில், தோட்டக்கலைத்துறை சார்பில் சுமார் 70 கிலோ கேரட், முள்ளங்கி, பீட்ரூட் போன்ற காய்கறிகளால் 2 அணில்களின் உருவம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழாவில் இயற்கை வளம் பாதுகாப்பு, மரங்களை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளுடன் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த சாரல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நிறைவடைகிறது.

Next Story