நாகையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை 5-வதுநாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


நாகையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை 5-வதுநாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 7:35 PM GMT)

நாகையில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் 5-வதுநாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதனை தொடர்ந்து விடிய, விடிய பெய்ய தொடங்கிய மழை நேற்று மதியம் வரை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் நாகை நீலா மேலவீதி, வ.உ.சி.சாலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மழை நீரில் தத்தளித்தவாறு சென்றனர்.

இதேபோல காடம்பாடி சிவசக்தி நகர், முதலாவது கடற்கரை சாலை, நாகூர் வள்ளியம்மை நகர், எம்.ஜி.ஆர். நகரில் மழை தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். நீலாயதாட்சியம்மன் கோவில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யமுடியாமல் தவித்தனர். விடிய, விடிய பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த கனமழை காரணமாக நேற்று நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. மேலும் மாவட்டத்தில் கடந்த 26-ந்தேதி முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நேற்று 5-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் தங்களது படகுகளை கடுவையாற்றுக்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

தலைஞாயிறு, வாய்மேடு

இதேபோல் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கீழையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேங்கியுள்ள மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைஞாயிறு, வாய்மேடு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் தலைஞாயிறில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும் சாய்ந்த மின்கம்பங்களை மின்வாரிய துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி

திட்டச்சேரி பகுதிகளில் பெய்த மழையால் வயல்களில் நேரடி நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பலத்த மழை காரணமாக திட்டச்சேரி புதுமனை தெருவை சேர்ந்த முகம்மது முஜாகிர், திட்டச்சேரி இந்திரா நகரை சேர்ந்த மாதவன், ப.கொந்தகை சிவன் கோவில் தெருவை சேர்ந்த தங்கப்பன், ப.கொந்தகை வ.உ.சி. நகரை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரின் கூரைவீடுகள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

வேதாரண்யம்

வேதாரண்யத்தில் பெய்த கன மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உட்பிரகாரம், வெளிபிரகாரம் தென்பகுதி ஆகிய இடங்களில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் அவதிபட்டனர். தகவல் அறிந்ததும் கோவில் நிர்வாகத்தினர் மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.


Next Story