கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: வீராணம் ஏரியில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்


கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: வீராணம் ஏரியில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 30 Nov 2019 10:45 PM GMT (Updated: 30 Nov 2019 7:48 PM GMT)

கனமழையால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோ மீட்டர் நீளம், 5.6 கிலோ மீட்டர் அகலம், 48 கிலோ மீட்டர் சுற்றளவு என பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். மேலும் வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.

அதுமட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு. அதாவது வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கும் அளவை பொறுத்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி நீர் கொண்டு செல்லப்பட்டு, மாநகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

இந்த ஆண்டு காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணை நிரம்பியது. அங்கிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. இதனால் வீராணம் ஏரி நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி, அதன் நீர்மட்டம் 47 அடிக்கு மேல் உயராத வகையில் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் மற்றும் வீராணம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை ஆகியவற்றில் இருந்து நேற்று மதியம் வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயரத்தொடங்கியது.

இதுபற்றி அறிந்ததும் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், கீழணை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர்கள் ஞானசேகர், வெற்றிவேல் ஆகியோர் விரைந்து வந்து வீராணம் ஏரியை பார்வையிட்டனர். இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 1,500 கனஅடியும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. வீராணம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Next Story