திருவண்ணாமலையில் கழுத்தை இறுக்கி புதுமாப்பிள்ளை கொலை


திருவண்ணாமலையில் கழுத்தை இறுக்கி புதுமாப்பிள்ளை கொலை
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 8:28 PM GMT)

திருவண்ணாமலையில் கழுத்தை இறுக்கி புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா அரடாப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல். அவருடைய மகன் உதயசூரியன் (வயது 30), வேலூர் ரோட்டில் மருந்துக்கடை வைத்து உள்ளார். அவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. உதயசூரியனுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலூர் ரோடு எடப்பாளையம் ஏரிக்கரையில் உதயசூரியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவருடைய கழுத்தை துணியால் இறுக்கி கொல்லப்பட்டதற்கான அடையாளம் இருந்து உள்ளது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story