தலைமை ஆசிரியையை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்


தலைமை ஆசிரியையை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 5:30 PM GMT)

பாலக்கோடு அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் முத்துக்கிரு‌‌ஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினார்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை காமராஜர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பிரகா‌‌ஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர் பணிஇடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நடவடிக்கைக்குள்ளான ஆசிரியைக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியை சிவகாமி சுந்தரிக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், அதனால் பள்ளி தலைமை ஆசிரியை தங்களை மிரட்டியதால் அந்த ஆசிரியர் மீது புகார் கூறியதாகவும் சம்பந்தப்பட்ட மாணவிகளில் ஒருவர் கூறியதாக தகவல் வெளியானது. இதையொட்டி நேற்று தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விரிவான விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துக்கிரு‌‌ஷ்ணன், பாலக்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், தாசில்தார் வெங்கடேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெற்றோர் மற்றும் மாணவியிடமும் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். மாணவியின் பெற்றோரிடம் எழுத்துப்பூர்வமாகவும் புகார் பெறப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துக்கிரு‌‌ஷ்ணன் கூறுகையில்,

பள்ளி தலைமை ஆசிரியை மீது பெற்றோர் அளித்துள்ள புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் புகாரில் உண்மை உள்ளதா? இல்லையா? என கண்டறியப்படும். விசாரணை தொடர்பான அறிக்கை கிடைத்த பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story