அரும்பாவூர் பச்சமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு


அரும்பாவூர் பச்சமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 7:07 PM GMT)

அரும்பாவூர் பச்சமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர், மலையாளப்பட்டி மற்றும் பூலாம்பாடியை சுற்றி பச்சமலை உள்ளது. இந்த மலையின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய, விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கல்லாற்றில் ஆறு எது, வயல் எது என்று தெரியாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் மலையாளப்பட்டி, சாஸ்திரிபுரம், சின்னமுட்லு, கவுண்டபாளையம், பூமிதானம், கொட்டாரக்குன்று, மேட்டூர், அரும்பாவூர், பூலாம்பாடி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதேபோல அரும்பாவூர் அங்காளபரமேஸ்வரி கோவில், தழுதாழை இளங்காளியம்மன் கோவிலின் உள்ளே தண்ணீர் புகுந்தது. மேலும் அரும்பாவூர் அருகில் மேட்டூர் செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

பயிர்கள் சேதம்

இதனால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும் அய்யர்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராணி (வயது 40), அஞ்சலி (38) ஆகியோரின் குடிசையின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பொக்லைன் எந்திரங்களை கொண்டு வழிவகை செய்யப்பட்டு, வீடுகளில் புகுந்த வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது. இந்த கன மழையினால் பச்சமலை அடிவாரத்தில் மேடான பகுதியிலிருந்து பள்ளத்தில் தண்ணீர் கொட்டுகிறது. இந்த திடீர் நீர் வீழ்ச்சியினை அந்த பகுதி மக்கள் ஆர்வமுடன் சென்று வேடிக்கை பார்த்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில் அரும்பாவூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமான விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

மேலும் இந்த கல்லாற்றில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கல்லாற்றை ஒட்டியுள்ள கிரு‌‌ஷ்ணாபுரம், வெண்பாவூர், பெரியவடகரை, பசும்பலூர், வி.களத்தூர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை கண்டு ஆச்சரியத்துடனும், பிரமிப்புடன் பார்த்து மகிழ்ந்தனர். ஆற்றங்கரையோரம் உள்ள கிரு‌‌ஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்தது.

நோயாளிகள் அவதி

இதைத்தொடர்ந்து உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருந்த 27 நோயாளிகள் உடனடியாக தீயணைப்பு படையினர் உதவியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்களில் 7 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 20 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.

மேலும் கிரு‌‌ஷ்ணாபுரம் மருத்துவமனையை சுற்றி வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் தற்காலிகமாக கிரு‌‌ஷ்ணாபுரம் சமுதாயக்கூடத்திற்கு மருந்து மாத்திரைகளை மருத்துவ குழுவினர் எடுத்து வந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர். கல்லாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்கள் நேற்று காலை முதல் மாலை வரை அச்சத்துடன் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story