திருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை


திருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2019 10:15 PM GMT (Updated: 3 Dec 2019 7:41 PM GMT)

திருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூர் மெயின் சாலையில் கொய்யாத்தோப்பு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் காயத்துடன் இறந்து கிடப்பதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தவர் மயிலாடுதுறை ஓ.எஸ்.எம். நகரை சேர்ந்த ரிக்கப்சந்த் மகன் ஜித்தேந்திரகுமார்(வயது 34) என்பதும், இவர் திருமருகல் சந்தைப்பேட்டையில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

பொருட்கள் மாயம்

இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் திருமருகலில் உள்ள தனது நகைக்கடை மற்றும் அடகு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இறந்து கிடந்த ஜித்தேந்திரகுமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் அவரது கடை சாவி, பணப்பை, கழுத்தில் அணிந்திருந்த நகை ஆகிய எந்த பொருட்களும் இல்லை.

சாவில் மர்மம்.

ஜித்தேந்திரகுமாரின் சாவில் மர்மம் இருப்பதாக, அவருடைய சித்தப்பா அஜித்குமார் திட்டச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கொலை செய்தார்களா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story