விழுப்புரம், கல்வி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை-மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு


விழுப்புரம், கல்வி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை-மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 4 Dec 2019 10:30 PM GMT (Updated: 4 Dec 2019 1:04 PM GMT)

விழுப்புரத்தில் கல்வி அதிகாரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ராயல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர் புதுக்கோட்டையில் குடும்பத்துடன் தங்கி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் விழுப்புரத்தில் உள்ள வீட்டிற்கு மாதத்திற்கு ஒரு முறை வந்து செல்வது வழக்கம்.

 இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவருடைய வீட்டின் முன்பக்க கதவு மற்றும் மேல்மாடி கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி புதுக்கோட்டையில் உள்ள சுந்தர்ராஜூக்கும், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். இதனிடையே சுந்தர்ராஜ் குடும்பத்தினரும் விழுப்புரத்துக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் அறைகளில் பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் ரொக்கம் மற்றும் 2½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

சுந்தர்ராஜ் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருவதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், காரை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கொள்ளை நடந்த வீட்டில் பதிவான ரேகைகள் மற்றும் தடயங்களை போலீசார் சேகரித்து சென்றனர்.

 இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கல்வி அதிகாரி வீட்டில் கார் மற்றும் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story