வட்டார அளவிலான வேளாண் எந்திரம்-கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


வட்டார அளவிலான வேளாண் எந்திரம்-கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2019 11:00 PM GMT (Updated: 5 Dec 2019 4:15 PM GMT)

வட்டார அளவில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

வேளாண் பணிகளின் போது, அதற்கான எந்திரங்கள்-கருவிகளை சொந்தமாக வாங்க இயலாத விவசாயிகள் அவற்றை வாடகைக்கு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 3 மையங்கள் அமைக்க ரூ.30 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. வேளாண் பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வாடகை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரூ.25 லட்சம் மதிப்பில் வட்டார அளவிலான ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும். இவ்வாறான மையங்களை அமைத்திட முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் போன்றோர் முன்வரலாம். இவ்வாடகை மையங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை அந்தந்த பகுதிகளில் சாகுபடியாகும் பயிர்கள், மண்ணின் தன்மை, வேலையாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு இம்மையங்களை நடத்த முன்வருபவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

மானிய இருப்பு நிதி கணக்கில்

இவ்வாறான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்களை அமைக்க முன்வருபவர்கள் வேளாண்மை பொறியியல் துறையினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் எந்திரங்களிலிருந்து தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். மொத்த மானிய தொகையில் பொது பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிட பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் மானிய இருப்பு நிதி கணக்கில் 2 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும்.

மீதித்தொகை பயனாளியின் சேமிப்பு வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 2 ஆண்டுகளுக்கு பின் பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத் தொகை பயனாளியின் வங்கி கணக்கில் திரும்ப வழங்கப்படும். இவ்வாறான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர் உடனடியாக வருவாய் கோட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story