வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை அமைச்சர் தகவல்


வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2019 11:00 PM GMT (Updated: 5 Dec 2019 5:29 PM GMT)

வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் - நாகை சாலையில் 17 ஏக்கரில் வேதாமிர்த ஏரி அமைந்துள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரியை தினமும் எண்ணற்ற பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது பெய்த மழையால் இந்த ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் உள்ள தண்ணீரை சரியான முறையில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கோரிக்கை விடுத்தனர். உடனே அவர், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், என்ஜினீயர் பிரதான்பாபு ஆகியோரை தொடர்பு கொண்டு தண்ணீர் வீணாக செல்லும் இடத்தில் மதகு அமைத்து தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என கூறினார்.

தடுப்புச்சுவர்

இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேதாரண்யம் நகரின் மிக பெரிய ஏரியான வேதாமிர்த ஏரியின் கரைகளை பலப்படுத்தி அழகு படுத்தும் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஏரியின் வடபுறம் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு பொதுமக்கள் குளிப்பதற்காக படித்துறையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு ஏரியை சீரமைக்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் இருந்து ஏரியின் மூன்று புறமும் தடுப்புச்சுவரும், நடைபயிற்சிக்கு என தனி பாதை, பூங்கா ஆகியவை அமைக்கப்படும். ஏரியின் தென்பகுதியில் வடிகால் உள்ள இடத்தில் தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க மதகு அமைக்கப்படும்.

ஏரியை தூர்வாரி, நடுப் பகுதியில் சிறிய கோபுரம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஒன்றிய செயலாளர் கிரிதரன், வக்கீல் சுப்பையன், நமச்சிவாயம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜரெத்தினம், இளைஞரணி அமைப்பாளர் திலிபன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story