பெரம்பலூர் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை


பெரம்பலூர் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 5 Dec 2019 10:15 PM GMT (Updated: 5 Dec 2019 6:47 PM GMT)

பெரம்பலூர் அருகே தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள எறையூரை சேர்ந்தவர் செல்வம்(வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி. இவரும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து செல்வம், மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜன், இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story