தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு வாட்ஸ்-அப் ஆடியோவில் உருக்கமான பேச்சு


தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு வாட்ஸ்-அப் ஆடியோவில் உருக்கமான பேச்சு
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 9:37 PM GMT)

சேலத்தில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் வாட்ஸ்-அப் ஆடியோவில் அவருடைய உருக்கமான பேச்சு வெளியாகி உள்ளது.

கன்னங்குறிச்சி,

சேலம் மல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன்(வயது 26). இவர் சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள கிரி‌‌ஷ் என்ற தனியார் கார் நிறுவனத்தின் குடோனில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கோகுலகண்ணன் மாலை நேரத்தில் தனது உரிமையாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்திக்கு போன் செய்வது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் அவர் போன் செய்யவில்லை. இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அந்த குடோனுக்கு வந்தார்.

அப்போது அங்கு கைகள் வயர்களால் கட்டப்பட்ட நிலையில் கோகுலகண்ணன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் கைகள் கட்டப்பட்டிருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

மர்ம சாவு

இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நிலையத்தில் கோகுலகண்ணனின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளனர். அதன்பேரில் போலீசார் மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு கோகுலகண்ணனின் உறவினர்கள் பலர் திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கோகுலகண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவருடைய உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர்.

வாட்ஸ்-அப் ஆடியோ

மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘கோகுலகண்ணன் செல்போன் எண்ணில் இருந்து நண்பர் ஒருவருக்கு சம்பவத்தன்று வாட்ஸ்-அப் ஆடியோ சென்று உள்ளது. அதில், ‘கோகுலகண்ணன், நான் பல சிக்கலில் இருப்பதால் தற்கொலை செய்கிறேன். என்னை மன்னியுங்கள். அண்ணனுக்கு விரைவில் திருமணம் செய்து வையுங்கள். அவருடைய குழந்தைக்கு என்னுடைய பெயரை சூட்டுங்கள் என்று உருக்கமாக பேசி உள்ளார். இதனால் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம்’ என்றனர்.


Next Story