குமரியில் 149 பதற்றமான வாக்குச்சாவடிகள்: உள்ளாட்சி தேர்தலில் 5.18 லட்சம் பேர் வாக்களிப்பார்கள் கலெக்டர் தகவல்


குமரியில் 149 பதற்றமான வாக்குச்சாவடிகள்: உள்ளாட்சி தேர்தலில் 5.18 லட்சம் பேர் வாக்களிப்பார்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 9 Dec 2019 8:33 PM GMT)

குமரியில் 149 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 110 பேர் வாக்களிக்க உள்ளனர் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. வருகிற 16-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 17-ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 19-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். அன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 27-ந் தேதி முதல் கட்டமாகவும், 30-ந் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறும்.

தேர்தலை பொறுத்தவரையில் முதல் கட்டத்தில் திருவட்டார், மேல்புறம், குருந்தங்கோடு, தக்கலை, ராஜாக்கமங்கலம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களிலும், 30-ந் தேதி அகஸ்தீஸ்வரம், முன்சிறை, தோவாளை, கிள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெறும்.

வாக்காளர்கள் விவரம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 18 ஆயிரத்து 110 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 62 ஆயிரத்து 956 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 55 ஆயிரத்து 56 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 98 பேரும் அடங்குவர். இந்த தேர்தலில் 95 கிராம பஞ்சாயத்துகளில் 864 வாக்குச்சாவடிகள் இருக்கும். மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் மொத்தம் 11-ல் முதல் கட்ட தேர்தலில் 6 வார்டுகளுக்கும், இரண்டாவது கட்ட தேர்தலில் 5 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

ஊராட்சி ஒன்றிய வார்டுகளைப் பொறுத்தவரையில் மொத்தம் 111 வார்டுகள் இருக்கும். இதில் முதல்கட்டத்தில் 61 வார்டுகளிலும், இரண்டாவது கட்டத்தில் 50 வார்டுகளிலும் தேர்தல் நடைபெறும். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தேர்தலை பொறுத்தவரையில் 95-ல் 48 கிராம பஞ்சாயத்துகளில் முதல் கட்டமாகவும், 47 கிராம பஞ்சாயத்துகளில் 2-வது கட்டமாகவும் நடைபெறும்.

தமிழகத்திலேயே முதல்முறையாக...

கிராம பஞ்சாயத்து வார்டுகளை பொறுத்தவரையில் மொத்தம் 984 வார்டுகள் உள்ளன. அதில் 519-ல் முதல் கட்டமாகவும், 465-ல் இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடக்கும். குமரி மாவட்டத்தில் இந்த தேர்தலில் சிறப்பு என்னவென்றால் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் 114 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்திலேயே முதல் முறையாக முன்னோட்டமாக இந்த ஊராட்சி ஒன்றியத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். இது மிகவும் பெருமையான விஷயம். முதல் முறையாக ஒரே கட்டுப்பாட்டு எந்திரத்தில் 4 வாக்குப்பதிவு எந்திரங்களை இணைத்து இந்த தேர்தல் நடைபெறும். அதில் முதல்கட்ட பரிசோதனையை முடித்துள்ளோம்.

எல்லா வகையான தேர்தல் குழுக்களையும் ஏற்படுத்தி உள்ளோம். போதுமான அளவு வாக்குப்பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவுக்கான பொருட்கள், பணியாளர்கள் இருக்கிறார்கள். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை

குமரி மாவட்டத்தில் 149 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் தேர்தல் நுண் கண்காணிப்பாளர்கள் அல்லது வீடியோ பதிவு அல்லது வெப் கேமரா இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும்.

2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அவை தேர்தலுக்கு முன்பாக, அதாவது 24-ந் தேதி பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகுமார், வக்கீல் ஜெயகோபால், பா.ஜனதா சார்பில் நாகராஜன், தர்மலிங்க உடையார், தி.மு.க. சார்பில் லீனஸ்ராஜ், வர்க்கீஸ், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story