கம்பம் அருகே, முல்லைப் பெரியாற்று கரை உடையும் அபாயம்


கம்பம் அருகே, முல்லைப் பெரியாற்று கரை உடையும் அபாயம்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:15 PM GMT (Updated: 11 Dec 2019 5:00 PM GMT)

கம்பம் அருகே சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் முல்லைப் பெரியாற்றின் கரை உடையும் அபாயத்தில் உள்ளதால் தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கம்பம்,

முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரானது சுரங்கப்பாதை வழியாக வந்து ராட்சத குழாய்கள் மூலம் லோயர் கேம்பை வந்தடைகின்றது. பின்னர் ஆற்றின் வழியாக தண்ணீரானது வைகை அணைக்கு செல்கிறது. ஆற்றில் வரும் தண்ணீரை மதகுகள் அமைத்து கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி கம்பம் அருகே சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் முல்லைப் பெரியாற்றில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் பிரிக்கப்படுகிறது. இந்த தலைமதகில் இருந்து சீலையம்பட்டி வரையில் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாளையம் பரவு கால்வாய் செல்கிறது. அந்த பரவு கால்வாயை 2ஆக பிரித்து பி.டி.ஆர். வாய்க்கால், தந்தை பெரியார் வாய்க்கால் என 2 வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. முடிவில் தண்ணீர் அந்தந்த பகுதியில் உள்ள குளங்களை சென்றடைகிறது. இதன்மூலம் சுமார் 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பருவமழை சராசரியாக பெய்ததால் முல்லைப் பெரியாற்றில் தற்போது தண்ணீர் செல்கிறது. ஆனால் முல்லைப் பெரியாற்றின் கரைகளை பல ஆண்டுகளாக பலப்படுத்தாததால் சுருளிப்பட்டி மணப்படுகையில் உள்ள ஆற்றின் தலைமதகுக்கு அருகே கரை உடையும் அபாயத்தில் உள்ளது. இதனால் மணப்படுகை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாவது மட்டுமின்றி, பாளையம் பரவு மற்றும் பி.டி.ஆர்., தந்தை பெரியார் வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வது தடைப்படும் நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கரை உடைப்பு ஏற்படும் பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரை சேதமடைந்துள்ளது குறித்து பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே தற்போது கரை உடையும் நிலையில் உள்ளது. கரை உடைந்தால் தண்ணீர் வீணாக வெளியேற வாய்ப்புள்ளது என்றனர்.

Next Story