முதலைப்பட்டியில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக தொடரும் போராட்டம்


முதலைப்பட்டியில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக தொடரும் போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 7:40 PM GMT)

முதலைப்பட்டியில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் கிராமமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகளும் இதில் பங்கேற்றனர்.

நச்சலூர்,

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே முதலைப்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான குளத்தின் கரைப்பகுதியில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் குளக்கரையில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் கருவறையை தவிர்த்து மற்ற பகுதிகளை இடித்து அகற்ற வேண்டும் என ஐகோர்டு மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால் முதலைப்பட்டி கிராம மக்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மாணவர்களும் பங்கேற்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதலைப்பட்டி செல்லாயி அம்மன் கோவில் வளாகத்தில் கிராம மக்கள் கூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவிலை இடிக்கும் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் கால அவகாசம் வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்தனர். நேற்று காலையும் தொடர்ந்து காத்திருப்பு போராத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். மேலும் முதலைப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்களின் அறிவுறுத்தலின்பேரில், வகுப்பறைகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதற்கிடையே இந்து முன்னணியினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். குளித்தலை ராமர் எம்.எல்.ஏ., வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே.எஸ்.செல்வக்குமார் மற்றும் பல்வேறு அமைப்பினர் அங்கு சென்று கிராம மக்களிடம் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக கூறிச்சென்றனர்.

தொடரும் போராட்டம்

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தம்பித்துரை, குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மற்றும் போலீசார் முதலைப்பட்டிக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுப்ரீம் கோர்டில் இருந்து இறுதி உத்தரவு வரும் வரை எங்களுக்கு காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறியதால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story