விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை காந்தலவாடி கிராம மக்கள் முற்றுகை


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை காந்தலவாடி கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Dec 2019 10:00 PM GMT (Updated: 12 Dec 2019 10:47 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க முயற்சிப்பதை கைவிடக்கோரி காந்தலவாடி கிராம மக்கள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த புதிய மாவட்டம் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைப்பாளையம் கிராமம் காந்தலவாடி, சிறுத்தனூர், மடப்பட்டு, சிறுளாப்பட்டு ஆகிய 4 ஊராட்சிகளை சார்ந்துள்ளதால் கருவேப்பிலைப்பாளையத்தின் ஒரு பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், மற்றொரு பகுதி விழுப்புரம் மாவட்டத்திலும் வருகிறது. எனவே தங்கள் கிராமத்தை ஒரே ஊராட்சியாக மாற்றி விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி கருவேப்பிலைப்பாளையம் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

இதுசம்பந்தமாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த சூழலில் மாவட்ட பிரிவினையின்போது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் சேர்க்கப்பட்ட காந்தலவாடி ஊராட்சியை தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தலவாடி கிராம மக்கள் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கிராமத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கக்கூடாது, தற்போதுள்ளபடி விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கோ‌‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

அப்போது அவர்கள், கலெக்டர் அண்ணாதுரையிடம், இதுபற்றி முறையிட்டு கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story