விருத்தாசலத்தில், விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் பேரணி


விருத்தாசலத்தில், விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் பேரணி
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 10:56 PM GMT)

விருத்தாசலத்தில் விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் மக்கள் உரிமை பேரணி நடைபெற்றது.

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மற்றும் அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மக்கள் உரிமை பேரணி நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பெண்களை அச்சுறுத்தும் தனியார் நுண் கடன்களை ரத்து செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஆண்டுக்கு 300 நாள் வேலை வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வாழ தகுந்த அளவில் தரமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த பேரணிக்கு மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். பேரணியில் புகழேந்தி, குப்புசாமி, சுரே‌‌ஷ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் தனவேல், மாநில குழு நிர்வாகி கொளஞ்சிநாதன், ராஜசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரணியானது விருத்தாசலம் ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்கி சப்-கலெக்டர் அலுவலகத் தில் முடிவடைந்தது. தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பியவாறு சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story