நகைக்கடை உரிமையாளர் வீட்டில் தங்கம், பணம் கொள்ளை: வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை? போலீசார் விசாரணை


நகைக்கடை உரிமையாளர் வீட்டில் தங்கம், பணம் கொள்ளை: வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Dec 2019 10:15 PM GMT (Updated: 14 Dec 2019 7:56 PM GMT)

சேலத்தில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 2.2 கிலோ தங்கம், பணம் ஆகியவற்றை வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று இருக்கலாம்? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. மேலும் 50 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம்,

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே சுவர்ணபுரியில் ஏ.என்.எஸ். ஜூவல்லரி உள்ளது. இதன் உரிமையாளர் ஸ்ரீ பா‌ஷியம் (வயது 37). குரங்குச்சாவடியில் இவருடைய வீட்டிற்குள் நேற்று முன்தினம் அதிகாலையில் புகுந்த 2 முகமூடி கொள்ளையர்கள் 2.2 கிலோ எடை கொண்ட தங்கம், வைர நகைகள் மற்றும் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளைபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.76 லட்சம் ஆகும். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீபா‌ஷியம் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. பின்னர் கண்காணிப்பு கேமராவில் இருந்து படங்கள் எடுக்கப்பட்டு பழைய குற்றவாளிகளின் படங்களுடன் ஒப்பிட்டு பார்த்து, அதில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசைைய காட்டியுள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். இதனிடையே லாக்கர் சாவி இருக்கும் இடம் எப்படி கொள்ளையர்களுக்கு தெரிந்தது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அந்த சாவியை எடுத்து வந்து தான் லாக்கரை திறந்து வைரம், தங்கம், பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தப்பி சென்ற வழிப்பகுதியில் இருக்கும் தெருக்களில் எங்கெல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறோம்.

வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் முகமூடி அணிந்து, டிப்-டாப் உடையுடன் உள்ளே செல்வது தெரிகிறது. மேலும் லாக்கர் மற்றும் வீட்டுக்குள் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்துள்ளோம். இதை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

50 பேரிடம் விசாரணை

மேலும் வழக்கு தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் வீட்டில் வேலை பார்க்கும் காவலாளிகள், தோட்டக்காரர்கள் மற்றும் ஊழியர்களை அழைத்தும் விசாரிக்கப்பட்டது. இதேபோல் சந்தேகப்படும் நபர்கள் என இதுவரை 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதிலும் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரியவில்லை என்றால் சுங்கச்சாவடி செல்லும் சாலை, சாரதா கல்லூரி சாலை, ஓமலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்படும். இந்த வழக்கில் தொடர்புடைய முகமூடி கொள்ளை யர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story